சிவாஜி கணேசனின் முத்தங்கள்

நீங்கள் கவிஞர் இசையின் (கவிதை) வரிகளைப் படித்துள்ளீர்களா?. இல்லையென்றால், உங்களுக்குள்ளும் உங்களுக்கு வெளியிலும் இருக்கின்ற அற்பத் தனங்களை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்றே அதற்கு இலக்கியத்தில் இன்னொரு பொருள் இருக்கிறது. கவிஞர் இசையின் "சிவாஜி கணேசனின் முத்தங்கள்" தொகுப்பையும், வேறு சில கவிதைகளையும் வாசித்த பின்பு மேற்கூறிய கருத்து எனக்குள் தோன்றியது.
கவிதை என்பதே அற்பத் தனங்களால் ஆன ஒரு இலக்கிய மிடுக்குத்தான். அதனை கடுமையான பயிற்சியின் மூலம் கைக்கொணர வேண்டும் என்று நினைப்பது நீங்கள் எழுதிய கவிதைகளை அற்பமாக்கிவிடும். இசையின் கவிதைகளில் அநேக இடங்களில் இருப்பது அவருடைய அற்பத்தனங்கள்தான். ஆனால் அவை மொழிவயப்படுகையில் அவ்வரிகள் மிக மிடுக்காகின்றன.
இசையின் வரிகளைக் கவிதைகள் என்று சொல்வதில் உடன்பாடில்லை. அது வெற்று வார்த்தைகளால் ஆன உன்னத மொழிச்செயற்பாடு. அதற்குள் சுவர்ணலாதா, அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி, இயேசு, ஒபாமா, இளையராஜா, ஆன்ட்ரியா, வைக்கம் முகமது பஷீர், சிவாஜி கணேசன், குரங்கு, வீட்டுநாய், கைக்கிளை-பெருந்திணை என்று பல விடயங்கள் விசித்திரமாக வந்து போகும். அதற்கும் கவிதைகளுக்கும் சம்பந்தப்படுத்தும் சிறுபிள்ளைத்தனம்தான் இசையின் வரிகள் நமக்குத் தரும் உயரிய அனுபவம்.
அத்துடன் இசை எழுதும் நகுலனின் வரிகள் போன்ற சுருக்கக் கவிதைகள் மிக மட்டமாக உள்ளது. அது இசைக்குக் கைகூடவில்லை. மீண்டும் அதை அவர் தனித்து எழுதினால் சரியான விமர்சகனால் சீண்டப்படுவார்.
இத்தொகுப்பிலுள்ள மிக முக்கியமான கவிதைகளாக; இந்த எட்டையும் குறிக்கலாம்.
1. சித்தாந்தங்களின் துப்பாக்கிகள் 1-3.
2. கலைத்தன்மை மிளிரும் வீடு.
3. காதுவலியாகிய நீ.
4. கைக்கிளை, பெருந்திணை, இன்ன பிற.
5. சிவாஜி கணேசனின் முத்தங்கள்.
6. ராஜகிரீடம்.
7. தலைவிரி கோலம்.
8. உப்புபுளிமிளகாயார்.
அழகியலோ, கோட்பாடுகளோ, இதர புராதனத்தின் மயக்கங்களோ தொழிற்படாத தமிழ்க் கவிதைகளைப் படிக்கும் ஆர்வம் யாருக்கும் உண்டென்றால், இசையின் வரிகளை அவர்களுக்காகப் பரிந்துரைக்கலாம்.
தொகுப்பிலுள்ள இசையின் கவிதையொன்று,
மகா ரப்பர்.
=
பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக் கொண்டிருக்கிறான் சிறுவன்
அதை அருகிலிருந்து
பார்த்தபடியிருந்தவன் தம்பி
இதுபோல் 14.03.2001ஐ
அழிக்க முடியுமா என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.

Comments

Popular Posts