ஈவேரா: மறுப்புகள்.

இனி ஈ.வே.ராமசாமியின் சிஷ்யர்களுடன் விவாதம் செய்வதாக இல்லை. அதற்கு முன்பாகவே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு இந்த ரேகை தேய்விலிருந்து கொஞ்ச நாட்கள் விலகியிருக்க வேண்டியுள்ளது. தமிழறிவே இல்லாமல் தமிழைத் திட்டித் தீர்த்த ஈவேராவை அரசியல் சரிநிலையில் வைத்து இடதுசாரிகள் செய்யும் இந்து எதிர்ப்புக் கூத்துக்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது தெரியும். அதற்கு அவர்களது பதற்றங்களே ஆதாரமாயுள்ளன. தமிழை ஈவேரா திட்டவில்லை என்கிறார்கள். "பெரியார் களஞ்சியம்" என்ற பெயரில் ஈவேராவின் பேச்சுக்களும், குடியரசு, விடுதலை இதழில் அவரெழுதிய தலையங்கங்களும் சாட்சிகளாகவுள்ளன. இவற்றை ஒருவன் நேரமொதுக்கி வாசித்துப் பார்த்தால் தெரியும் அதற்குள் இருப்பது பச்சையான நிலவுடைமை வெறியும் கவர்ச்சிகரமான அய்ரோப்பியக் கலாசாரமும் என்று.
இந்து ஞான மரபையும், தமிழ் மொழியின் இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கியப் பரப்பையும் அறியாத ஒருவர் ஈவேராவை மட்டும் வாசித்துவிட்டு இங்கு உரையாடல் செய்து அவருடைய அனைத்துக் கருத்துக்களையும் நியாயப்படுத்துவார் என்றால் அப்படியானவர்களுடன் உரையாடல் செய்து ஆகப்போவது ஒன்றுமில்லை.
1. தங்கத்தட்டிலே வைத்த மலம் என்று திருக்குறளைச் சொன்னவர்.
2. வடமொழிக்கலப்பற்ற தூய தமிழால் எழுதப்பட்ட தமிழ்க்காப்பியமான கம்பராமாயணத்தை காறி உமிழ்ந்தவர்.
3. எந்த ஒரு தமிழ் நூலையும் பதிப்பித்து தமிழின் வளர்ச்சிக்குப் பங்களிக்காதவர்.
4. இந்து ஞான மரபின் வழிவந்த எந்த ஒரு இந்துச் சீர்திருத்தவாதியையும் எடுத்துக்கூறாமல் ஒரு விட்டேத்தியான முறையில் புராண உதாரணங்கள் மூலம் இந்துமதத்தை ஒதுக்கியவர். (தீண்டாமை என்பதைக் காரணம் காட்டி அம்பேத்கர்கூட கிறிஸ்த்தவம், இஸ்லாம் முதலிய மதங்கள் இருந்தும் பௌத்தத்தைத் தான் தழுவுகிறார்.  பௌத்தம் என்பது  அடிப்படையில் இந்து வேதமரபுடன் விவாதித்து வளர்ந்த ஒன்றுதான். ஆக இதனை இந்திய மரபு என்று கருதலாம்.)
5. அனைத்துக்கும் காரணம் பார்ப்பனன் என்று கூறிவிட்டு, இடைநிலைச் சாதிகளை விமர்சிக்காமல் சாதியொழிப்பு என்று புலம்பியவர். இடைநிலைச் சாதிகளில்தான் அடிமை- குடிமை முறை என்பதே அதிகமிருக்கிறது. சாதியைப் பிராமணன் கொண்டு வந்திருந்தாலும் இரண்டாயிரம் வருடமாக இடைநிலைச் சாதிகளில் பரவிய சாதி மரபைப் பிராமணனை உதைப்பதன் மூலம் நீக்கமுடியுமா. எவ்வளவு முட்டாள்த்தனமான யோசனை.
6. பெண்ணுரிமை என்று கூவிக்கொண்டு தன்னுடைய சொந்த விடயத்தில் அதனைப் பின்பற்றாது ஊருக்கு உபதேசம் செய்தவர் ஈவேரா.
7. இந்தியாவிலுள்ள கிறிஸ்த்தவர்களும், முஸ்லிம்களும் செல்வச்செழிப்புடனும், கல்வியறிவுடனும் வாழக் காரணம் அவர்களுடைய மதம் என்று மொன்னைத்தனமாக யோசித்து மதமாற்றங்களை ஊக்குவித்தவர் ஈவேரா. மொழி, பண்பாட்டு அழிப்புக்கு வெளிப்படையாகவே வழிசெய்தவர்.
(ஆதாரம்- பெரியார் களஞ்சியம் 1 பக்கம்- 204)
8. அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா, இரட்டை மலை ஸ்ரீநிவாசன் முதலிய தமிழகச் சாதியொழிப்பின் முன்னோடிகளைக் கணக்கில் எடுக்காமல் விட்டு ஈவேரா என்ற கலகக்காரரை மட்டும் கொண்டாடுவது ஆச்சரியம்தான். இதற்குக் காரணம் தமிழகத்தில் ஆரியம்- திராவிடம் என்ற மாயையை வலுவாக ஈவேரா காலூன்றச் செய்துவிட்டார். அதன் மூலங்களைத் தேடி ஆராயாமல் அப்படியே நம்பிவிட்டார்கள் தமிழர்கள்.
9. இன்றைய நூற்றாண்டில் படித்த செல்வாக்குமிக்க அநேகமான தமிழ்ப் பிராமணர்கள் தமிழையும், தமிழரையும் மோசமாக அவமதிக்கக் காரணம் ஈவேராவின் இனவெறிதான். ஆரம்பத்தில் இது இப்படி மோசமாக இருக்கவில்லை. கம்யூனிசம் பெருமெடுப்பில் படுகொலைகளுடன் வளர்ந்ததால்தான் இன்றைய அமெரிக்க முதலாளித்துவம் உலகின் ஒழுங்கைத் தீர்மானிக்கிறது என்ற துர்பாக்கிய நிலை. இன்று சோவியத்தும் வீழ்ச்சியுற்றது, கம்யூனிசமும் காணாமல் போகிறது. அதுபோல இங்கு ஈவேரா செய்த வினை தமிழர் வெறுப்பு சகல மாநிலத்திலும் பரவிக்கிடக்கிறது. வீதிக்கு வந்து எதிர்த்தே அனைத்தையும் பெறவேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளனர்.
10. திராவிடர் என்பது தமிழர், மலையாளி, தெலுங்கர், கன்னடர் முதலியவர்களை உள்ளடக்கியது. ஆனால் ஏனைய மூன்று இனத்தவர்களும் இதைப்பற்றிப் பேசுவது இல்லை. அதற்கான கட்சிகள்கூட அங்கு இல்லை. ஆனால் தமிழர்கள் தம்மைத் திராவிடத்தின்  புதல்வர்கள் என்று ஏமாந்தபடிதான் உள்ளனர்.
11. இலங்கையின் சாதிய மறுப்பில் புலிகள் தமிழ்த்தேசியம் என்பதையே கையாண்டனர்.  அதற்காக அவர்கள் மதத்தையோ பண்டை இலக்கியங்களையோ துற்றவில்லை. இன்றுகூட சாதிய மோதல்களும் தீண்டாமையும் இலங்கையில் மிகக்குறைவு என்றே கூறவேண்டும். இது தமிழகத்தில் இன்னும் அதிகமாகியுள்ளது.  ஈவேரா இருந்த போது கீழ்வெண்மணி சாதியப் படுகொலைகள் நிகழ்ந்தது. ஆனால் புலிகளின் ஆட்சியில் சாதிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. புலிகள் வரலாற்று ரீதியில் செய்த மிகப்பெரிய பிழை இந்திய தேசியத்தைப் பகைத்து, இந்திய இந்துக்களிடம் பகைமை உருவாக்கிக் கொண்டதுதான்.  இதற்கு மூலமாகவும் பின்னணியில் வழிகாட்டிகளாகவும் அவர்களிடம் இருந்தது திராவிடம் என்ற மமதை. அவர்கள் மூலமே வளர்ந்து அவர்களால் புறக்கணிக்கப்பட்டே அழிந்தார்கள். இதே போன்ற அழிவைத்தான் தமிழகம் இன்று ஈவேரா மற்றும் திராவிட கோஷம் மூலம் செய்து கொண்டிருக்கிறது. வெறும் எட்டுக்கோடித் தமிழர்களால் மாபெரும் இந்து மரபை எதிர்க்கமுடியும் என்பது போலிக்கருத்து. அந்த எட்டுக்கோடியில் பாதிப்பேர்கூட இதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.
00
இந்து மதம் தனது தீண்டாமை என்ற அழுக்கிலிருந்து தற்காலத்தில் விலகிக் கொண்டு வருகிறது. இத்தருணத்தில் மிஸனரிகளாலும், ஆங்கிலப் பத்திரிகைகளாலும் விஷமத்தனமான கருத்துக்கள் திரித்து உண்டாக்கப்படுகின்றன. RSS என்ற உலகின் அதிகளவு தொண்டர்களைக் கொண்ட  இந்துமத அடிப்படைவாத அமைப்பினால் இந்த மதமாற்றங்கள் தடுக்கப்படுவதாகவும், தீண்டாமை நடைபெறும் இடங்களில் ஞான மரபைப் போதித்து Reform களில் ஈடுபடுகிறார்கள் என்றும் அறியக்கிடைக்கிறது. அவர்கள் மோசமான இந்துத்துவர்கள் என்றொருபுறம் இருந்தாலும் இப்படியான செயல்களில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது.
திராவிடர்கள் அவமதித்த இந்து மரபையும் தமிழ் மரபையும் மீள் வாசிப்பின் மூலம் தமிழில் கொண்டுவந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவருடைய விஷ்ணுபுரம் நாவல் இதற்கு உதாரணம். ஈவேரா அவமதித்த சிலப்பதிகாரத்தை மீள்வாசிப்புச் செய்வதற்காக பதினைந்து வருட உழைப்பின் மூலம் கொற்றவை காப்பியத்தையும் எழுதியுள்ளார். இது தமிழின் ஆகச் செழிப்பான ஒரு படைப்பு.
இவற்றையெல்லாம் அடிப்படையிலிருந்து யோசிக்காத பெரியாரியர்கள்தான் இங்கு அதிகம். மதத்தைச் சீர்திருத்துவதை விட்டு அதனைப் புறக்கணித்ததில் இருந்தது பச்சையான உள்நோக்கங்கள்தான்.  வெள்ளையர் காலத்தில் அதிகாரச் செல்வாக்குப் பெற்றிருந்த பிராமணர்களால் உயர்சாதியினரின் நிலப்பிரபுத்துவம் பறிக்கப்பட்டதை அறிந்து, அதனால் பாதிப்புற்றவர்களில் ஒருவராக ஈவேரா இந்து மதத்தை எதிர்க்கக் களம் புகுந்தார். சரி, இங்கு இந்து மதத்தை ஏன் எதிர்க்க வேண்டும். இந்து மதத்தைப் புனிதமாக நிர்வகித்தது பிராமணர்கள்தானே.  அவர்களைத் திட்டி இனவெறியை மூட்டுவதன் மூலம் இந்து மதத்தையும், அவர்களது புனிதங்களையும் கேவலப்படுத்தி தனது உள்நோக்கங்களை நிலப்பிரபுத்துவத்திலிருந்து கிளர்ந்து வந்தவர்கள் செய்து காட்டினார்கள்.  இதில் ஒருவராக இருந்தவர் ஈவேரா.
ஒரு மரபை அழித்து தனது கோட்பாட்டை நிறுவலாம் என்று நினைத்தது ஈவேராவின் பெருங்கேடு. அந்த மரபைச் சீர்திருத்தத்துக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் விட்டதன் அவருடைய உள்நோக்கங்கள் இன்று பலரால் அம்பலப்படுத்தப்படுகின்றன.  இதற்குத் தற்காலிகமாகத்தான் ஓய்வினை எடுத்தாகவேண்டியுள்ளது. ஆனால்  ஈ.வே.ராமசாமி மீதான விமர்சனங்களில் எப்போதும் மாற்றமிருக்காது.
00

Comments

Popular Posts