கே.சச்சிதானந்தன் கவிதைகள்: ஒரு அறிமுகம்.

கவிதைகள் மீதான ஆர்வத்தைத் தொடக்க காலத்தில் ஏற்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக கே.சச்சிதானந்தனையே இன்று நினைத்துப் பார்க்கிறேன். நான் வாசித்த அநேகமான சச்சிதானந்தனின் கவிதைகளை சிற்பி மொழிபெயர்த்திருந்தார். ஒருசிலவற்றை நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பிலும் வாசித்துள்ளேன். ஆலிலையும் நெற்கதிரும், கவிதை மீண்டும் வரும் என்ற இரண்டு தொகுப்புக்கள் சிற்பியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன.
சச்சிதானந்தனின் கவிதைகளைப் புத்தகமாகப் படிக்க முன்பு கதவு மற்றும் ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால், நினைவில் காடுள்ள மிருகம் இந்த மூன்று கவிதைகளையும் தொடக்ககாலத்தில் அடிக்கடி வாசிப்பதுண்டு. இதில் கதவு என்பதை அவருடைய குரல் பதிவில் கேட்டுள்ளேன். "வாதிலும் ஏற்றி நடக்குன்ன..." என்று உணர்வுடன் அந்தக் கவிதையை ஆரம்பித்தார். அப்பொழுதுதான் கதவு என்பதன் மலையாள அர்த்தத்தை வாதில் என்றும் அறிந்து கொண்டிருந்தேன்.  அக்காலத்தில் மலையாளத்தை ஓரளவுக்கு விளங்கிக் கொள்வதற்கு அதிக முயற்சி செய்துகொண்டிருந்தேன்.  மலையாளத்தைப் புரிந்து கொள்ள எம்.ஜி. ஸ்ரீகுமாரின் சரியான உச்சரிப்பில் அமைந்த மலையாளப் பாடல்களையும் மேலும்பல மலையாளப் படங்களையும் ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்ப்பதுண்டு. மலையாள அரிச்சுவடி மூலம் மலையாளத்தைக் கற்க முயன்றபோதும் அது சாத்தியப்படவில்லை. மலையாளமொழியை விளங்கிக் கொள்வது போல எழுதுவது இலகுவல்ல என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. மலையாளப் படங்களைப் பார்க்கும் போது அது அங்குள்ள பிரதேசங்களைப் பொறுத்து அதன் பேச்சு வடிவம் மாற்றமடைகிறது என்று உணரக் கூடியதாகவும் இருந்தது. ஏனென்றால் கொமர்ஷியல் படங்களின் உச்சரிப்பு இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் ஒரு பிராந்தியத்தை மையப்படுத்தி உருவாக்கப்படும் படங்கள் மிகவும் சிக்கலான வட்டார வழக்குச் சொற்களாகவும் இருந்தன. அதனால் ஆரம்பத்தில் வணிகத் திரைப்படங்களின் வழியேதான் மலையாளத்தை விளங்கிக் கொள்ள வேண்டிய நிலமை ஏற்பட்டது. பின்னர்தான் மலையாளத்தின் மண்வாசனைத் திரைப்படங்களைப் பார்த்து அந்த மண்ணின் சூழலை விளங்கிக் கொள்ளவும் முடிந்தது.
( கே.சச்சிதானந்தன் )
தமிழப் படங்களைவிடவும் மலையாளப் படங்களின் சிறப்பம்சம் அந்த மண்ணின் இயற்கை அழகை அப்படியே சித்தரிப்பதுதான். அந்தச் சித்தரிப்பை வேற்றுமொழிப் படங்களில் காணமுடியுமா என்று தெரியவில்லை. நான் பார்த்தவரைக்கும் மலையாளப் படங்கள் கேரள மண்ணை மிகத்தரமாகக் காட்சிப்படுத்துவனவேயாகும். அம்மண்ணிலிருந்து  உருவான சந்தோஷ் சிவனை இங்கே நாம் உதாரணமாகக் கூறலாம். மொழியைப் புரிந்து கொள்வதற்காகவே அம்மொழிப் படங்களைப் பார்த்திருந்தேன். ஆனால் அதுவே அந்த மண்ணின் கலாசாரத்தையும் வாழ்க்கையையும் அரசியலையும் புரிந்து கொள்ள வழிசெய்தது.
சினிமாவும் இலக்கியமும் ஒரு மொழியின், நிலத்தின் அழுத்தமான பிரதிபலிப்புத்தான். தமிழில் இலக்கியத்துக்கு உள்ள இடம் சினிமாவுக்கு இல்லை. ஆனால் மலையாளத்தில் இரண்டுமே அழுத்தமான கவனம் பெறுபவை. அவ்வகையில் எங்கோ ஒரு தொலைவிலுள்ள எனக்கு கேரளத்தின் வாழ்வியலை அறிமுகம் செய்ததில் மலையாளப் படங்களின் பங்கு முக்கியமானது. அதுபோலத்தான் கேரள இலக்கியங்களும். குறிப்பாகக் கவிதைகள். வீரான்குட்டி, கல்பற்றா நாராயணன், பி.பி.ராமச்சந்திரன், டி.பி.ரஜீவன், அய்யப்பப் பணிக்கர், ஆற்றூர் ரவிவர்மா, பி.ராமன் முதலியோர் எனது பிரியத்துக்குரிய மலையாளக் கவிஞர்களாவர். இவர்களது கவிதையின் குறியீட்டுத் தன்மையும் கேரள மனிதர்கள் பற்றிய, அங்குள்ள அரசியல் பற்றிய சித்திரங்களும் மிக அதிகமாகக் கவனிக்க வைத்தன. இதில் கே.சச்சிதானந்தன், ஆற்றூர் ரவிவர்மா மற்றும் வீரான்குட்டி ஆகியோர் எனது வாசிப்பில் இன்று வரையும் தொடர்ந்து உள்ளவர்கள்தான்.  மலையாளச் சினிமாவை நேரடியான செவிவழியாகவும், மலையாள இலக்கியத்தை மொழிபெயர்ப்பின் வழியாகவும்தான் வாசித்துள்ளேன். மொழிபெயர்ப்பின் வழியே வாசித்தமையால் சில இடங்களில் அந்த மண்ணின் பூரணத்தை என்னால் உணர முடியவில்லை என்பதையும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மலையாளச் சினிமா பற்றிய சித்திரம் எனக்குள் ஏற்கனவே இருந்தமையால் இலக்கியத்துக்கு மலையாள ரூபம் கொடுக்கக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில் எனக்கு நெருக்கத்துக்கு உரிய கவிஞரான சச்சிதானந்தனின் கவிதைகள் பற்றிய சில பார்வைகளை இங்கே முன்வைக்கவுள்ளேன். அது எனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்தெழுந்த ஒன்றாகவே இருக்கும். சச்சிதானந்தன் தனது கவிதைப் பாரம்பரியம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். "சங்கக் கவிதையும் பக்திக் கவிதையுமே என் கவிதைப் பாரம்பரியம். பிரபுத்துவக் கவிதையல்ல" இந்த முன்மொழிவு எவ்வளவு முக்கியத்துவம் மிக்கது என்பதை நாம் தமிழுக்குப் பொருத்திப் பார்க்கவேண்டும். எட்டயபுரத்தின் அரசசபையில் இருந்த பாரதி தனது பதவியை உதறித்தள்ளிச் சென்னை சேர்ந்து சுயாதீனமாக இயங்கினார். அதன் பின்னர்தான் அவரது சிந்தனையில் நவீனம் கருவடைந்து தமிழின் இலக்கியத்தை இன்னொரு திசையில் பாயச்செய்தது. அதனால்தான் "கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்" என்ற உலகக் குரலை அவரால் உண்டாக்கவும் முடிந்தது. அப்படியான ஒரு குரலைச் சச்சிதானந்தனிடமும் காணலாம். அவர் சங்கக் கவிதை என்பதைக் கணியன் பூங்குன்றனின் உலக நோக்கிலிருந்தும் பக்தி மரபினை ஆன்மீக மரபிலிருந்து பெறுபவராகவுமே இருந்துள்ளார்.  அதே வேளையில் அவரது உலகப் பெண்கள் பற்றிய நோக்கினை பல கவிதைகளில் எழுதியுள்ளார். இதனை பெண்கள் என்று வகுக்காமல் உலகநோக்கு என்று கூறுவதும் நவீனத்தின் ஒரு முறைமைதான்.

"நான் கருகித் தீரவிருக்கும்
ஒரு கவிதை.
நீங்கள் யூகித்ததுபோலவே
ஒரு பெண்பிள்ளையின் காதல் கவிதை.
பெண்பிள்ளைகளின் காதல் கவிதைகள்
சில சமயங்களில் மட்டுமே
நெருப்பிலிருந்து தப்புகின்றன.
அப்பாவின் நெருப்பிலிருந்தும் அண்ணனின் நெருப்பிலிருந்தும்
அம்மாவின் நெருப்பிலிருந்தும்கூட.
அவர்களுடைய அம்மாவிடமிருந்து பரவியது அந்த நெருப்பு.
சில பெண்பிள்ளைகள் மட்டுமே
இந்த நெருப்பிலிருந்து அரைகுறையாகத் தப்புகிறார்கள்
முழுவதும் கருகாத அவர்களை
நாம் சில்வியா பிளாத்* என்று
அக்மதோவா* என்று
கமலாதாஸ்* என்று அழைக்கிறோம்.
சில பெண்பிள்ளைகள்
நெருப்பின் விதியிலிருந்து தப்புவதற்காக
காதலுக்கு
பக்தியின் முகத்திரையை அணிவிக்கிறார்கள்
அப்போது ஒரு மீரா* பிறக்கிறாள்
ஒரு ஆண்டாளும்* ஒரு மகாதேவி அக்காவும்* பிறக்கிறார்கள்.
ஒவ்வொரு கன்னியாஸ்திரீயும்
நித்திய இளைஞரான யேசுவுக்கான
கருகிய காதல் கவிதையே
அபூர்வமாக, அதி அபூர்வமாக
ஒரு பெண்பிள்ளை உலகைப் பார்த்துச் சிரிக்கும்
வலிமை பெறுகிறாள்
பெண்களுக்கு மட்டும் சாத்தியமான மென் பரிவுடன்.
அப்போது நாம் அவளுக்கு
சிம்போர்ஸ்கா* என்று பெயரிடுகிறோம்.
அப்புறம்
சாப்போ* தப்பியது
அவளுடைய காதல் கவிதைகளில்
பெண்பிள்ளைகளையே முன்வைத்துப் பேசியதனால்தான்.
(கருகிய கவிதை,
தமிழில்: சுகுமாரன்)

இந்தக் கவிதையில் நட்சத்திரம் இடப்பட்ட இடங்கள் அவரது கவிதைக்குள் உட்செலுத்தப்பட்ட உலக நோக்குகளாகும்.  ஒரு பெண் எழுதியிருக்கவேண்டிய கவிதை. பெண்கள் எழுதினால் பிரச்சாரமாகவும் குறுகிய நோக்கிலும்தான் இருந்திருக்கும். அநேகமாக எப்போதும் அகத்தையும் உடலையும் பேசிப்பேசிக் கொல்வதுதானே பெண்ணியக் கவிதைகளின் ஆதார சுருதி. இக்கவிதையில் நிறைவு வரைக்கும் பெண் கவிதையின் வரலாற்று மொழியைப் பற்றியும் பெண் கவிஞர்களைப் பற்றியும் பேசுகிறது. இக்கவிதை அவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும் சொல்லும் விடயங்களால் முக்கியத்துவம் கொள்கிறது.
கவிதையில் குறிப்பிடப்படும் சில பெண் கவிஞர்கள்.

1. சில்வியா பிளாத்- அமெரிக்கப் பெண்கவிஞர். Confessionalism என்கிற பாவமன்னிப்பைத் தனது கவிதைகளில் முன்னெடுத்தவர்.
2. அக்மதோவா- ரஷ்யாவில் பிறந்த உலகப் பெண்கவிஞர்களில் ஒருவர்.
3. கமலாதாஸ்- கேரளத்தில் பிறந்த பெண்கவிஞர். மலையாளத்தில் கொண்டாடத்தக்க பெண் எழுத்தாளராக இருந்தவர்.
4. மீரா- வட இந்திய கிருஷ்ண பக்தையாக, வைணவ கவிஞராக அறியப்படுபவர்.
5. ஆண்டாள்- தமிழின் பெண் ஆழ்வார். கிருஷ்ண பக்தை. கவிஞர்.
6. மகாதேவி அக்கா- கன்னடத்தின் பெருமை மிக்க பெண் கவிஞர். சிவனைத் தனது கணவனாகப் பாவித்துப் பல கவிதைகள் எழுதியுள்ளார்.
7. சிம்போர்ஸ்கோ- நோபல் பரிசு பெற்ற ஐரோப்பியப் பெண்கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் தலையாய பெண்கவி என்ற பெருமைக்குரியவர்.
8. சாப்போ- ஓரினக்காதலைப் பாடிய கிரேக்கப் பெண் கவிஞர். இவரை மேற்கத்தைய பெண்கவிஞர்களின் முன்னோடி என்று அழைப்பர். இவர் பிறந்த லெஸ்போஸ் என்ற தீவின் பெயரை வைத்துத்தான் லெஸ்பியனிஸம் என்ற சொல் தோன்றியுள்ளது. 

கருகிய கவிதையில் பாரதி சொன்ன கலைச் செல்வங்களை சச்சிதானந்தன் கொணர்ந்துள்ளார். அதனால்தான் அவர் பிரபுத்துவக் கவிதைகளை உதறினார். அந்த மாசடைந்த முறையைப் பின்பற்றுவதில் பல கலைச்செல்வங்கள் மழுப்பலடைகின்றன என்பதே உண்மை. அத்துடன் சங்க மரபின் உலக நோக்கினையும் பக்தி மரபின் ஆன்மீகப் பார்வையையும் காத்திரமாகத் தனது கவிதைகளில் வைத்துள்ளார். அவை பழமை வாதத்துடன் மோதுவனவாக இருக்கவில்லை. புதிய மொழியையும் நுட்பங்களையும் கண்டடைந்தே தன்னை வளர்த்துக்கொண்டது. அதற்குச் சொந்தக்காரராகவே சச்சிதானந்தன் இருக்கின்றார். பல காலமாக சச்சிதானந்தன் கம்யூனிஸ்டாக இருந்தவர் என்றும் பின்னர் அதனை நியாயபூர்வமாக விமர்சித்து அதிலிருந்து பகுதியளவில் விலகியவர் என்றும் அவருடைய ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய கவிதையை மார்க்சியக் கவிதை என்று குறிப்பிடவேண்டாம் என்று சொல்லும் தொனி அவரது கவிதைகளிலுள்ளது. ஏனென்றால் அது எளிமைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகப் போய்விடும் என்றும் கூறுகிறார். ஆண் பெண் வேறுபாடு, தனிமை, பாலியல், பௌராணிகம், சடங்குகள், மதங்கள் இவை பற்றிய குறிப்புக்கள் மார்க்சியத்தில் குறைவு என்பதால் அதன் போதாமைகளைக் கவிஞனே நிரப்ப முடியும். அதற்குள் நின்றுகொண்டு அவனால் அதனைச் சாதிக்க முடியாது. ஆகவே தன்னுடைய கவிதைகளை மார்க்சியக் கவிதைகள் அல்ல என்று மறுத்த ஒருவராகவே சச்சிதானந்தன் வெளிப்படுகிறார். இது மார்க்சியத்தை விடவும் இந்தியப் பண்பாட்டு மரபு மிக நீண்ட ஒரு தன்மை கொண்டது என்பதையே வெளிப்படுத்துகிறது. அதனால்தான் அவர் சங்கத்தையும் பக்தியையும் வலியுறுத்துபவராகவும் அதே நேரம் உலகமொழியிலுள்ள படைப்புக்களை இந்திய நோக்கில் முன்வைப்பவராகவும் வெளிப்படுகின்றார்.
"நினைவில் காடுள்ள மிருகம்" என்ற கவிதையில் அவர் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தனிமனிதனுக்குள் இருக்கும் உணர்வின் ஆக்ரோஷம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  மிருகம் என்பதை மனிதனாகவே நாம் இதில் அடையாளம் காணவேண்டும். ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளிலும் பாதகமான சந்தர்ப்பங்கள் மேலெழும்போது அது இன்னொரு கூட்டத்தை உண்டாக்குகிறது. அவை பெருங் கூட்டமாக ஒன்றுகூடி சமூகத்துக்குப் பிரதிகூலங்களை ஏற்படுத்துகின்றன. "அதன் சிந்தனைகள் காட்டுப் பாதையில் குதித்தோடுகின்றன" என்ற வரியில் வெளிப்படுவது கட்டுக்கடங்காமைதான். இதனை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்குள்ளும் மிருகம் இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றார். அந்தத் தன்னிலை விளக்கம் தானும் மிருகங்களுக்குள் ஒரு மிருகம் என்பதன் அடையாளச் சிக்கலாகவே நோக்கவேண்டும். இந்த அடையாளச் சிக்கலுக்கான தீர்வை அவர் முன்வைக்கவில்லை. ஏனெனில் தானும் அவர்களுள் ஒருவனாக இருப்பதுடன் தன்னால் கூட அதனைக் கடந்துவர முடியாத ஒரு நிலை உள்ளது. பின் எப்படி  உலகுக்கு உபதேசம் செய்வது என்ற உறுத்தல்தான் "என் நினைவிலும் காடுகள் உள்ளன" என்ற கருத்து. 

"நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.
அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன"
(கே.சச்சிதானந்தன்)
சச்சிதானந்தனின் காதல் பற்றிய பார்வை பெண்களைக் கௌரவப்படுத்தும் ஒன்றாகவே பல கவிதைகளில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் கூறியது போலத்தான் தான் சார்ந்த சித்தாந்தத்தில் ஆண் பெண் உறவு என்ற நிலை வரும்போது பெண்ணை அடிமைப்படுத்தவே அந்தச் சித்தாந்தத்தில் இருந்தும் மனம் முனைகிறது. ஆகவே கவிஞன் அதனைக் கடந்து வரவேண்டும். அப்பொழுதுதான் சுயாதீனமான உலகப்பார்வை ஏற்படும். அந்நிலையைக் கடந்து வந்தவர்களில் முக்கியமானவர் சச்சிதானந்தன். அவர் காதல் பற்றி எழுதினால் அது பெண்ணைக் கௌரவமாக வர்ணிக்கும் ஒன்றாக அல்லது ஆண் பெண் உறவை ஆத்மபூர்வமாக பிரஸ்த்தாபிப்பதாகவே இருந்துள்ளது. அதற்காக மொழியை அலங்கரித்து அழுத்தமான அர்த்தங்கள் கொண்டதாகக் காதல் கவிதைகளை எழுதினார். அவற்றின் தனித்துவம் மேலோட்டமாகவே யாராலும் புரிந்துகொள்ள முடியும் என்பதைத்தாண்டி அதற்குள் மிக ஆழமான பிரபஞ்சப் படிமம் உள்ளது என்பதையும் இவ்விடத்தில் கூறியாகவேண்டும். "ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் காற்றும் மழையும் நிறைந்த கடலில் மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத்தேடி காலம் செலுத்துதல் என்று பொருள்" இந்த நோக்கு பிற காதல் கவிதைகளிலிருந்து வேறுபடுத்தும் ஒன்றேயாகும். தொடர்மொழியாகவும் அதேநேரம் பழைய மரபிலிருந்து கிளர்ந்தெழும் நவீன காதலுக்கான பிரபஞ்ச நோக்காகவே காதலுக்கான புதியதோர் பூமியை பார்க்க முடிகிறது. 
சச்சிதானந்தன் கேரளத்தின் கொடுங்களூரில் 1946 மே மாதம் 28ம் தேதி பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் முடித்தவர். இரிஞ்ஞாலக்குட கல்லூரியில் பல காலம் ஆங்கிலப் பேராசிரியராக இருந்துள்ளார். 1997 இல் சாகித்ய அக்கடமியின் Indian Literature ஆங்கில இதழாசிரியராக கடமையேற்றார். டெல்லியில் சாகித்ய அக்கடமி செயலாளராகவும்  பணியாற்றியுள்ளார். இந்தியாவிலிருந்து நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கத் தகுதிபெற்ற ஒருவராகவும் இவர் இருந்துள்ளார். பல ஆயிரம் கவிதைகளை எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ளார். அத்துடன் இவரது பல கவிதையின் மரபார்ந்த நோக்கு நவீனத்தை அடைந்ததில் அய்யப்பப் பணிக்கர் மற்றும் சங்கம்புழை ஆகியோரின் பங்கு அதிகம் உள்ளதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.  உதாரணமாக விமர்சகர் நரேந்திர பிரசாத் இந்தக் கருத்தை முன்வைத்தவர்களில் முதன்மையானவர். அத்துடன் தன்னுடைய கவிதைகளின் தரிசனத்துக்குக் காரணமானவர் துஞ்சத்து எழுத்தச்சன் என்பதையும் சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார். எழுத்தச்சனின் கவிதைகளுக்குச் சூரியப் பேரொளி இருந்தது என்பதையும் அதில் கூறினார். மார்க்சியம் பற்றிய இவரது பார்வைகள் விமர்சன பூர்வமானவை. குறிப்பாக சீனா மற்றும் சோவியத் பற்றிய அபிப்பிராயங்களை விமர்சனமாகவே முன்வைத்துள்ளார். ஏற்கனவே சோவியத்தின் வீழ்ச்சியைத் தான் ஊகித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளக் கவிதைகள் நவீனத்தை அடைந்ததில் சச்சிதானந்தத்தின் பங்கு முக்கியமானது. ஏற்கனவே பலர் போட்டுவைத்த பாதையில் அவர் நடந்து வந்தவர் என்றாலும்  தனக்கென்று உருவாக்கிய வழி  மலையாள இலக்கியத்துக்கு அளவுகோல் ஆனது என்றே குறிப்பிடலாம். அத்துடன் தன்னைக் கவிஞராக மட்டுமன்றி மிகச்சிறந்த விமர்சகராகவும் அடையாளப்படுத்தியுள்ளார். பல நூல்கள் அவரது நேர்த்தியான விமர்சனத்துக்காகவே வாசிக்கப்பட்டன. ஒரு கல்வியியலாளராக இருந்தபோதும் அதற்குள் சுருங்கிவிடாத உலகப் பார்வை பலருக்கு அரிதான சேர்க்கையாகும். அதனைச் சாத்தியமாக்கியவர் சச்சிதானந்தன்.
தான் சார்ந்த சித்தாந்தம் மீது விமர்சனங்களை முன்வைத்து அந்தச் சித்தாந்தத்துக்குள் முழுமையாக வீழ்ந்து விடாமலும் அவர் எழுதிய கவிதைகள் சமூக நோக்கிலும் அழகியல் நோக்கிலும் இன்றும் முக்கியமானதாகவே உள்ளது. இந்த நோக்கு தமிழில் ஆரம்ப காலத்தில் பாரதியார் ஏற்படுத்திய வழி. அதன் பின்னர் அதனைக் கெட்டியாகப் பிடித்தவர்கள் மலையாளக் கவிஞர்கள்தான். அதில் ஒருவர்தான் சச்சிதானந்தன். அவரை பாரதி வழிவந்த கவிஞனாகவே நான் கருதுகிறேன். அதனால்தான் அவரைச் சுயாதீனமான உலகக் கவிஞர் என்று இங்கே அடையாளப்படுத்துகிறேன். 

(கே. சச்சிதானந்தனின் கவிதைகளை சுகுமாரன், சிற்பி, நிர்மால்யா ஆகிய மூவரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.) 
கே. சச்சிதானந்தனின் கவிதைகள்.

1. பைத்தியக்காரர்கள்.

பைத்தியக்காரர்களுக்கு
ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.
நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சிநேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
மேலே பார்க்கும்போது
அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களும் நம்மைப் போலத்தான்.

ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.

பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவைச் சென்றடைய.
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகள்களை உணர.
பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.

2. ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் .

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளைக் கல்லினுள்ளிருந்து
உயிர்ப்பிப்பது என்று பொருள்.
அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்
கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது,
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்.
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்.
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்.
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.
நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.

00

Comments

  1. Hi, This is a great article. Loved your efforts on it buddy. Thanks for sharing this with us. thathuva kavithai

    ReplyDelete

Post a Comment

Popular Posts