ஷோபா சக்திக்கு..

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் இந்துத் தேசியத்தையும் உண்டாக்கக் கூடாது என்றொரு எதிர்வினைய எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்கள் "இது இராவண ஜென்ம பூமி" என்ற உணர்ச்சி வயப்பட்டு எழுதி முடித்துள்ளார். முதலில் அவருக்கு ராவணன் என்றால் யாரென்ற விளக்கத்தை வழங்கிவிட்டு ஏனையவற்றைப் பார்க்கலாம். இவர் எந்த இராவணனைச் சொல்கிறார் என்று குழம்பினேன். ஏனென்றால் இங்கே ராவணன் என்ற பெயரில் ஏராளம் பேர் உள்ளனர். பிறகுதான் தெரிந்தது திராவிடக் கட்சிகளால் தமிழன் என்று கூறப்படும் ராவணனை இவர் விழித்துள்ளார். அவரது புள்ளியில் இருந்தே தொடங்கலாம்.
ராவணன் இந்தியாவின் ஆரம்பகால டெல்லியில் பிறந்தவர். இராவணன் ஒரு பிராமணர். இராவணன் தமிழரும் அல்ல. இங்குள்ள ஈவேரா தற்குறிகளும் திராவிட மூடர்களும் திரித்த கருத்துத்தான் இராவணன் தமிழன் என்பதெல்லாம். அவர் இலங்கையில் பிறந்தார் என்பதும். அவர் இறைவனிடம் கைலாயத்தில் வரம்பெற்று இலங்கையை ஆண்டதாகப் புராண வரலாறு கூறுகிறது. (கடைசியாக இப்படியும் பேச வைத்துவிட்டார் இந்த ஷோபா) இராவணன் ஒரு இந்து மதத்தவர்.சிவ பக்தர். ஆனால் இங்குள்ளவர்கள் அவரைத் திராவிடர் என்று கட்டமைக்கின்றனர். திராவிடம் என்பது அரசியலுக்காகப் போலியாக வெள்ளையர்கள் உருவாக்கிய இன வாதமேயொழிய வேறொன்றுமில்லை. நேற்றைய பதிவில் அந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. இலங்கையில் இந்துத் தேசியம் தேவையற்ற ஒன்று என்று ஷோபா சக்தி அரசியல் சரிநிலை விளக்கம் எழுதி அதற்காக் கீழே இது இராவண ஜென்ம பூமி என்று வரலாற்றைப் பிழையாகவும் கணித்துள்ளார். இராவண ஜென்மபூமி இந்தியா என்பதே என்ற வரலாற்றை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்குள் இருப்பது ஒரு மூர்க்கமான அரசியல். தொடர்ந்து முஸ்லிம்களின் ஜிகாதிப் படைகள் இங்கையில் இந்துத்தமிழர்கள் மீது மேற்கொண்ட படுகொலைகளை நியாயம் செய்பவர். அதுபற்றி வாய் திறக்காதவர். இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குப் பதறுகிறார். இருபது வருடங்களுக்கு முன்பாகவே நாட்டைவிட்டை வெளியேறியவரான ஷோபாசக்தி இங்கே என்ன நடந்தது நடக்கிறது என்பதை அரசியல் சரிநிலையில் வைத்தே பார்த்திருப்பார். பிறரின் கூற்றுக்களின் மூலமே அவர் இங்குள்ள அரசியலை அறிந்திருப்பார். அறிந்ததை அங்குள்ள லிபரல்களுடன் விவாதித்து இங்கே சாத்தியம் என்று பகற்கனவு காண்கிறார். அ.மார்க்ஸ் போன்றவர்கள் இலங்கையில் வஹாபிஸம் இல்லை என்றார்கள். இலங்கையில் வஹாபிஸம் 2007 ஆம் ஆண்டுகளில் பரப்பப்பட்டு இன்று சூஃபியிச முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமூகங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனையெல்லாம் வெளிநாட்டில் இருந்து போலி நல்லிணக்கம் பேசும் ஷோபா சக்தி அறிய வாய்ப்பில்லை.
இலங்கையில் வடகிழக்கை இணைத்தாலே இரத்த ஆறு ஓடும் என்று வெளிப்படையாகவே ஒரு முஸ்லிம் அமைச்சர் கூறுகிறார். இன்று திரும்பவும் அவர் அமைச்சராகியுள்ளார். இப்படியான சந்தர்ப்பங்களில் இவரால் எப்படி இந்துத் தேசியம் மூலம் நாம் முன்வைக்கும் தேசிய அரசியல் நீரோட்டத்தை நிராகரிக்க முடிகிறது.
ஷோபா சக்தி மிகச் சிறந்த படைப்பாளி. அவரது நாவல்களையும் சிறுகதைகளையும் தேடித் தேடி வாசித்துள்ளேன். பல சமயங்களில் அந்த எழுத்து ஆளுமைக்காகவே நான் பிரமித்துப் போவதுண்டு. சந்தேகமென்றால் அவருடைய கொரில்லா நாவலையும் தொகுக்கப்படாத கதைகளையும் வாசித்துப் பாருங்கள். அவர் கதைகளிலுள்ள அழகியல் நேர்த்தியை யாராலும் இலகுவில் புறந்தள்ள முடியாது.
ஆனால் அவருடைய அரசியல் ஞானம் என்பது வெறுமனே நடைமுறைக்கு ஒத்துவராததாகவே உள்ளது. எப்போதும் தமிழக அரசியலுடன் இலங்கை அரசியலைப் பொருத்திப் பார்க்கும் அவர் தேசிய அரசியலுடன் இதற்கான தீர்வை எப்படி முன்வைக்கலாம் என்று நடைமுறை யதார்த்தத்தில் யோசிக்காதவர். நல்லிணக்கம் என்ற பசப்புகளை வார்த்தையில் அவர் கூறுகிறார். அவரைப் பின்தொடர்பவர்கள் துவேசத்தை வெளிக்காட்டுகின்றனர். பொதுவாக அவர் முஸ்லிம்களின் உரிமைக்காகத் தீவிரமாகப் பிரான்சில் இருந்துகொண்டு களமாடுபவர். அவர் தமிழருக்கான தீர்வை முன்வைப்பார் என்பது சாத்தியமில்லை. அத்துடன் அவர் அடிக்கடி கூறும் வசனம் முஸ்லிம்களுடன் தமிழர்கள் சமரசம் செய்யவேண்டும் என்பதாகும்.  பலமுறை சமரசம் செய்ய முயன்றபோதும் அதன் பெறுபேறுகள் வெறும் பிரச்சனைகளாகவே இருந்துள்ளன.
அத்துடன் தமிழ்த்தேசியம் மூலம் தீர்வு தர இலங்கையின் மஹா நாயக்கர்களும் இந்தியத் தேசியவாதிகளும் விரும்புவதில்லை. தமிழ்த்தேசியம் இலங்கைப் பெருந்தேசியத்தை உள்ளிருந்து பிளக்கும். தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நோக்கிச் செல்ல முனையும். ஆனால் இந்துத் தேசியம் எந்தத் தேசியங்களையும் உடைப்பதில்லை. இந்த நாட்டின் நிறுவன மயப்பட்ட பௌத்த மதம் இந்து மரபின் தொடர்ச்சியாகும்.  இந்த மரபு தமிழ் இளைஞர்களை வன்முறைக்குள் கொண்டு செல்லாது தேசிய அரசியலில் இலகுவாக ஒருங்கிணைத்துவிடும். ஆகவே இந்துத் தேசியம் மூலம் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்வதுதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு. இந்துத் தேசியத்தை இங்கே வளர்க்க ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ அமைப்பு தேவைப்படுகிறது. இல்லை நாம் தமிழ்த்தேசியம் மூலம்தான் தீர்வு காண்போம், பெருந்தேசியத்தைப் பிளக்கும் தீர்வினையே முன்வைப்போம் என்று கனவு காண்பவர்களுக்கான தீர்வினை எத்தனை தசாப்தம் போனாலும் இலங்கை அரசு தீர்வு வழங்காது. பௌத்த நிறுவனமயப்பட்ட தேசிய அரசு ஒருகாலமும் அதனை எதிர்க்கும் தேசியத்தை அரவணைக்காது. அதனைச் சேர்க்கும் இந்துத் தேசியத்தையே அரவணைக்கும். சேர்.பொன். ராமநாதன் மிகச் சிறந்த உதாரணம். இப்படியே நூறு வருடங்கள் தமிழ் என்று பசப்பிக் கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே கூறமுடியும். இந்துத் தேசியம் மூலம் தமிழர்கள் இணைந்து தீர்வுகளை முன்வைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற பலம்பொருந்திய அமைப்பினை இறையாண்மைக்கு உட்பட்டு இலங்கையில் அமைப்பதே சரியான வழி. இது தொடர்பான விளக்கங்களை இலங்கை மற்றும் இந்திய இந்துத் தேசியவாதிகளுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளேன். சில முரண்பாடுகளுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் சாதகத் தன்மைகளை உரையாடுகின்றனர். இங்கே தொடர்ந்து அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்து மதத்தை தேசிய நீரோட்ட இணைவு மூலமே தீர்க்க முடியும். அதற்கு நீண்ட கால ஆர்.எஸ்.எஸ் தொழிற்பாடு உதவியாக இருக்கும்.
தமிழ்த்தேசியம், இஸ்லாமியத் தேசியம் இந்த இரண்டுமே இலங்கைத் தேசியத்துக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடியது. தமிழ்த்தேசியத்தை இஸ்லாமியத் தேசியமோ இஸ்லாமியத் தேசியத்தைத் தமிழ்த் தேசியமோ சமரசம் செய்து ஏற்காது. அதுபோல இந்த இரண்டையும் பௌத்த தேசியம் ஏற்காது. தமிழர்களின் தீர்வுக்காகப் பௌத்த தேசியம் ஏற்பது இந்துத் தேசிய மரபு அரசியலையேதான். தமிழக வெத்துவேட்டுக் கூச்சல்களை இங்குள்ள தேசியவாதிகள் பொருட்படுத்தப் போவதில்லை. தொடர்ந்து வெட்டிக் கூச்சல்களும் கவர்ச்சிகர மேடைப் பேச்சுகளும் மீதமாகிப்போகும்.
இது இராவண ஜென்ம பூமி அல்ல. ஆறுமுகநாவலர் தோன்றி மறைந்த பூமி. இங்கு அவர் மூலம் இந்துத்தேசியம் வேர் கொள்வதை யார் தடுப்பார். அதன் தேவையை இயல்பாகவே தமிழர்கள் உணருவர்.

Comments

Popular Posts